குளித்தலை: தினகரன் செய்தி எதிரொலியால் குளித்தலை கடம்பன் துறையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அந்த பகுதியில் இருந்த பட்டு போன மரத்தை அகற்றி சாலை சீரமைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மினி டேங்க் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் இன்று (4ம் தேதி )சனிக்கிழமை மாலை 8 ஊர் சாமி சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் தைப்பூச தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக, 8 ஊர் சாமி அமர்ந்து பொதுமக்களுக்கு காட்சியளிக்கும் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. கடம்பன் துறை மைதானத்தில் மேற்கு பகுதியில் இட ஒதுக்கீடு செய்து மிட்டாய், கரும்பு, பல்வேறு சாதன பொருட்கள் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள் போடப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாது, ராட்டினம் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு சாதனங்கள் வந்து இறங்கி உள்ளன. இந்நிலையில் இரண்டு வருட காலமாக கொரோனா காலம் என்பதால் மக்கள் அதிக அளவில் தைப்பூசத் திருவிழாவிற்கு வருவது குறைந்து இருந்தது. இந்தாண்டு அதிக அளவில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கடம்பன் துறை செல்லும் வழியில் குகை வழிப்பாதை அருகே பட்டுப்போன மரம் இருக்கிறது. இந்த இடத்தில்தான் தீயணைப்பு துறை வாகனம் நிற்கும் இடமாக இருந்து வருகிறது. மேலும், இந்த இடத்தில் இருந்து தான் பொதுமக்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இந்த இடத்தில் உள்ள மரம் எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை ஏற்படலாம்.
அதனால் சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத்துறை நிர்வாகம் தைப்பூச திருவிழாவிற்கு அதிக அளவில் கூடும் இடமான தைப்பூசத் துறையில் இதுபோன்று நுழைவாயிலில் இருக்கும் மரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல, கடந்த பல மாதங்களாக தேரடி அருகில் பயன்பாடு இன்றி கிடந்த குடிநீர் மினி டேங்க் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்த செய்தி, தினகரன் நாளிதழில் வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியால் குளித்தலை கடம்பன் துறை குகை விழிப்பாதை அருகில் இருந்த பட்டுப்போன மரம் அகற்றப்பட்டது. தேரடி அருகில் குடிநீர் மினி டேங்க் பராமரிப்பு செய்து மீண்டும் பொதுமக்கள் குடிநீர் தேவைக்கு விடப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும், தினகரன் நாளிதழுக்கும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.