மாயனூர் காவிரி கதவணை ரூ.185 கோடியில் புனரமைக்கும் பணி மீண்டும் துவங்கியது: குடிநீருக்காக 20 மதகுகளில் தண்ணீர் திறப்பு

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணை ரூ.185 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. ஆனாலும் குடிநீருக்காக 20 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணை யில் 1.05 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அணையில் இருந்து 98 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, காவிரி மற்றும் கொள்ளிடம் மூலமாக திருச்சி முக்கொம்பூர், கல்லணை சென்றடைகிறது.

அங்கிருந்து, தஞ்சாவூர், புதுக்கோட்டை,அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு சென்றடைந்து பூம்புகாரில் கடலில் தண்ணீர் கலக்கின்றது. மேலும் மாயனூர் காவிரி கதவணையில் இருந்து 4 பாசன வாய்க்கால் மூலமாக திறந்து விடும் கண்ணீர் ஆனது பல ஆயிரம் கணக்கான விவசாய நிலங்களுக்கு பாய்வதால், இதன் மூலம் விவசாயங்கள் செழிப்பாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஜனவரி மாதம் தண்ணீர் அடைப்பது வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயனூர் காவிரி கதவணையின் 98 மதகுகள் வலுப்படுத்தும் வகையில் புனரமைக்கும் பணி ரூ.185 கோடி செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து புனரமைக்கும் பணி நடைபெற்ற வந்த நிலையில், ஜூன் மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மாயனூர் கதவணையில் புனரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி மாதம் காவிரியில் தண்ணீர் அடைக்கப்பட்டதால், புனரமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. கடந்த 20 நாட்களாக பணி நடைபெற்று வருகின்றது. இதுவரை 55 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் குடிநீர் பயன்பாட்டிற்காக மாயனூர் கதவுணையிலிருந்து 20 மதகுகள் வாயிலாக தண்ணீர் சென்று கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: