கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. மேலும், வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நெற்பயிர்களை இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியவில்லை. அதேபோல, விளைந்த நெல்பயிர்கள் உதிர்ந்து கொட்டி விடும் என்பதால், உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால், உழவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.

இவை ஒருபுறமிருக்க, மற்றொருபுறம், அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்துவிட்டன. அதனுடைய ஈரப்பதம் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக நெற்பயிர்களை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, தொடர்மழையால் உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்க, சேதமடைந்த நெற்பயிர்களை கணக்கெடுத்து அவற்றிக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். மழையில் நனைந்த நெல் மூட்டைகளை, ஈரப்பத விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: