குற்ற வழக்குகளில் மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.  யுவராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் குறைபாடுகள் உள்ளன என்று வாதிட்டனர். அரசு தரப்பில், மின்னணு ஆதாரங்களை திரிக்க வாய்ப்பில்லை என்று வாதிடப்பட்டது.  இதையடுத்து, தடயவியல் துறை நிபுணர்களை அழைத்து நீதிபதிகள் விளக்கங்களை கேட்டனர்.

 

பின்னர் நீதிபதிகள், குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசு வகுக்க வேண்டும். அந்த வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்தால் அதை இந்த வழக்கின் தீர்ப்புடன் சேர்க்கிறோம். தற்போது கண்காணிப்பு கேமரா பதிவுகளை முக்கியமான ஆதாரங்களாக பயன்படுத்துவதால் இந்த நடைமுறைகள், குற்ற வழக்குகளில் தீர்வு காண உதவியாக இருக்கும் என்று அறிவுறுத்தி விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: