பெண்களின் படம் அனுப்பி சிறுவனிடம் பணம் பறித்த 2 பேர் கைது

பெரம்பூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கரபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது 17 வயது மகன், கொளத்தூரில் உள்ள அரசு விடுதியில் தங்கி நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, மனிஷ் என்பவர் பழக்கமாகி உள்ளார். இவர், கடந்த புதன்கிழமை சிறுவனுக்கு போன் செய்து, கொடுங்கையூர் அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள மைதானத்திற்கு வரும்படி கூறியுள்ளார். மேலும், சிறுவனுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், சில பெண்களின் புகைப்படம் இருந்துள்ளது. இவர்கள் உனக்காக காத்திருக்கிறார்கள், என ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார்.

இதை நம்பிய சிறுவன் அப்பகுதிக்கு சென்றபோது, மனிஷ் மற்றும் இரு நபர்கள் சேர்ந்து, சிறுவனை கட்டையால் சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்று, இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜாபர் (18), கணேஷ் (18) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனிஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: