அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்

அவிநாசி: அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி  திருமணம் செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே  குன்னத்தூர் தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (48). விவசாயி. இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவருக்கு நீண்டகாலமாக திருமணமாகாமல் இருந்து வந்தது. கல்யாண புரோக்கர் மூலம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார். ஏற்கனவே 2 திருமணங்களை செய்த தேவி மூன்றாவதாக அவரை திருமணம் செய்துள்ளார்.  இந்நிலையில், சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து சுப்பிரமணியின் தாய் அவரது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து, ‘‘உங்கள் தாயார், சகோதரியிடம் கையெழுத்து வாங்கி 2 ஏக்கர் நிலத்தை விற்று விடுங்கள். நாம் திண்டுக்கல்லுக்கு சென்று குடும்பம் நடத்துவோம்’’ என சுப்பிரமணியிடம் தேவி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுத்தார். கடந்த மாதம் 15ம் தேதி பொங்கல் பண்டிகை தினத்தில் சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு தேவி ஊசி மூலம் மருந்து செலுத்தியுள்ளார். அவர் எதற்காக ஊசி போடுகிறாய்? என்று கேட்டபோது, காய்ச்சல் குணமாவதற்கு என்று கூறியுள்ளார்.

அந்த ஊசி போட்டதும் சிறிது நேரத்தில் சுப்பிரமணி மயக்கமடைந்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சுய நினைவை இழந்தார். இதையடுத்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுய நினைவு திரும்பியது. இது தெரிந்ததும் மருத்துவமனையில் இருந்து தேவி திடீரென மாயமானார். இதனால் அவர் மீது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுப்பிரமணியின் நிலத்தை அபகரிக்க அவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றதாக குன்னத்தூர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி நாமக்கல் தொழிலதிபர் ரவி என்பவரை தேவி 4வது திருமணம் செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று, நாமக்கல் பகுதியில் தங்கியிருந்த தேவியிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் தேவி ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி திருமணம் செய்து ஏமாற்றும் சாகச பெண் என்பது தெரியவந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த தேவி தொழிலதிபர்கள், வசதியுடைய ஆண்களை ஆசை காட்டி மயக்கி திருமணம் செய்து சில நாட்கள் குடும்பம் நடத்துவார் என்பதும் அவர்களிடம் இருந்து பணம், சொத்துக்களை பறித்து கொண்டு தலைமறைவாகி, அடுத்ததாக வேறு ஒருவருக்கு சாகச வலை விரித்து வீழ்த்தி திருமண வாழ்க்கையை தொடர்வாராம்.

சுப்பிரமணியுடன் தேவி வாழ்ந்து வந்தபோது, மனைவியை விவாகரத்து செய்த நாமக்கல் தொழிலதிபர் ரவி திருமணத்துக்கு பெண் பார்த்து வருவதை அறிந்தார். சுப்பிரமணியைவிட அவரிடம் அதிக பணம், சொத்து இருப்பதை அறிந்து சாகச வலை விரித்து பிடித்துள்ளார். அவரை திருமணம் செய்ய சுப்பிரமணி தடையாக இருப்பார் என நினைத்துதான் அவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து தேவியை குன்னத்தூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தேவியிடம் ஏமாற்றப்பட்ட தொழிலதிபர்கள் வேறு யாரும் உள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Related Stories: