கல்லூரி மாணவர் கோவை- சென்னை வரை தொடர்ந்து 18 மணி நேரத்தில் 528 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை

ஜோலார்பேட்டை: கல்லூரி மாணவர் கோவையிலிருந்து - சென்னை வரை சைக்கிளில் 18 மணி நேரத்தில் 528 கிலோமீட்டர் தூரம் கடந்து சாதனை படைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள பாட்டாளி நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் ஜீவானந்தம் (18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. இதனால் கடந்த இரண்டரை வருடங்களாக சைக்கிள் ஓட்டுவதில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

மேலும் அவர் சைக்கிள் ஓட்டி உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என முடிவு செய்தார். இதையடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையிலிருந்து சென்னை வரை சைக்கிளில் எங்கும் நிறுத்தாமல் செல்ல முடிவு செய்து கடந்த மாதம் 27ம் தேதி அதிகாலை 4.12 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் 28ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையை சென்றடைந்தார்.  இவர் வழியில் எங்கும் நிறுத்தாமல் 568 கிலோமீட்டர் தூரத்தை 18 மணி நேரத்தில் சென்றதை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இதனை அப்துல்கலாம் உலக சாதனை அலுவலகத்திற்கு சென்று ஒப்படைத்தார். அங்கு அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினர்.

Related Stories: