சென்னை: ரவுடிகள் செல்போனை பறித்துக் கொண்டதால், ஆத்திரமடைந்த பட்டதாரி வாலிபர் தன் இயலாமையை வெளிப்படுத்த வழி தெரியாமல், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த யாரோ சிலரின் 4 கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்ததால் வடபழனியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வடபழனி பாரதிஸ்வரர் நகர் 2வது தயாள் நகர் மெயின் ரோடு பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 4 கார் கண்ணாடிகளை ஆசாமி ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு, கற்களை கொண்டு உடைத்து வந்துள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது, வாலிபர் ஒருவர், போதையில் கண்ணாடிகளை உடைத்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, பொதுமக்கள் கார்களின் கண்ணாடியை உடைத்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, தஞ்சாவூர் நிர்மல் நகரை சேர்ந்த சத்தியன் (23) என்றும், பட்டதாரியான இவர், சென்னையில் அமைந்தகரை அய்யாவு காலனியில் தங்கி புத்தக கடையில் கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள டாஸ்மாக் கடையில் சத்தியன் மதுகுடித்து விட்டு, தனது அறைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, பெரியார் பாதையில் இருந்து ரவுடிகள் சிலர், சத்தியனை வழிமறித்து, அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு துரத்தி அடித்துள்ளனர். இதனால் தன்னை அடித்த ரவுடிகளை திருப்பி அடிக்க முடியவில்லையே என்ற இயலாமை மற்றும் போதை காரணமாக, யாரா சிலர் நிறுத்தி இருந்த 4 கார் கண்ணாடிகளை உடைத்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சத்தியனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.