மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது

புழல்: மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவடிரை கைது செய்தனர். தலைமறைவான கணவரை தேடி வருகின்றனர். சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசித்தவர் சுதாசந்தர் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ஆவடியில் இருந்து லட்சுமிபுரத்துக்கு கடந்த 2 மாதத்துக்கு முன் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுதாசந்தர் தனது பைக்கில் ஒரு இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் சாலையில் சென்றுள்ளார்.

அப்போது அவரது பைக்ைக ஒரு கும்பல் வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாசந்தரை  தலை, கழுத்து என சரமாரியாக வெட்டியது. இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதை பார்த்த அவருடன் வந்த இளம்பெண் கதறி அழுதார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார், கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை நடந்ததா, அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அவருடன் பைக்கில் சென்ற இளம்பெண் ஆவடி அருகே உள்ள மோரை பகுதியை சேர்ந்த ராகிணி என்பதும், இவரை கடந்த 3 வருடங்களாக சுதாசந்தர் காதலித்து வந்ததும், இதுபற்றி பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும், கடந்த ஒரு வருடத்துக்கு முன் ராகிணிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்ததும் தெரிய வந்தது. மேலும், சுதாசந்தர், ராகிணியுடன் ஆவடியில் வசித்துவிட்டு கடந்த இரண்டு மாதத்துக்கு முன்புதான் செங்குன்றம் லட்சுமிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதும் தெரிய வந்தது.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து போலீசார்  தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை சம்பந்தமாக ஆவடி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். அவரது கணவர் உள்பட சிலர் தலைமறைவாகி விட்டனர். மேலும்,  சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: