பிப்ரவரி மாதம் முழுவதும் ஆவின் தின கொண்டாட்டம்: அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: ஆவின் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில், பிப்ரவரி மாதம் முழுவதும் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் நடத்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்)  1981ம் ஆண்டு  பிப்.1ம் தேதி உருவாக்கப்பட்டது. இதையொட்டி பிப். 1ம் தேதி ஆவின் தினமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை இணைக்கும் விதமாக ஆண்டுதோறும் பிப். 1ம் தேதி ஆவின் தினமாக கொண்டாடப்படுவதை தொடர்ந்து. பிப்ரவரி மாதம் முழுவதும் அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

நுகர்வோர்களுக்கு சமையல் போட்டி, பால் உற்பத்தியாளர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு போட்டிகள், ஆவின் சமூகவலைத்தளங்களில் ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் சம்பந்தமான ஓவியம், விளம்பரம் வடிவமைத்தல், குறும்படம் போன்ற போட்டிகள் நடத்தி அதில் வெற்றியாளர்கள், சிறந்த பதிவாளர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்குதல், அதிகளவில் தொடர்ந்து பால் உபப் பொருட்களை வாங்கும் சிறந்த சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை இலக்கை எய்திய சிறந்த பாலகங்களையும் தேர்வு செய்து கௌரவப்படுத்தி நற்சான்று வழங்குதல், கால்நடை மருத்துவம் மற்றும் தடுப்பூசி முகாம் அமைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.  

இதில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு ஆவின்-உடன் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கெடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாத இறுதியில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: