ஒன்றிய அரசு பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி வகுப்பு: தமிழக அரசு இன்று முதல் நடத்துகிறது

சென்னை:  தமிழ்நாட்டு  தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள MTS பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வை அண்மையில் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் நடக்கும் இந்த தேர்வில் 10ம் வகுப்பில் தேர்வானவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் Staff Selection Commission (SSC)) எனப்படும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் இந்த தேர்வில் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் இல்லை.

இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பலவிதமான தேர்வுகளில் கலந்து, வெற்றி பெற்று, ஒன்றிய அரசு துறைகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பெரிய அளவில் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள MTS தேர்விற்கும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி காணொலி வகுப்புகளை நடத்த உள்ளது.  

தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள், தமிழ்வழியில் மட்டுமே படித்து ஆங்கிலத்தில் தேர்வினை எதிர்கொள்ள  தயக்கப்படும் மாணவர்கள், தனியார் போட்டி தேர்வு மையங்களில் பணம் செலவிட்டு பயிற்சிபெற இயலாத இளைஞர்கள் போன்றோரும் இந்த MTS போட்டி தேர்வில் போட்டி போட்டு, வெற்றி பெற்று நடுவண் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற இலக்குடன் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது AIM TN என்ற காணொலிப்பாதையில் பயிற்சி காணொலிகளை பதிவேற்றம் செய்யவுள்ளது.

மாணவர்கள் அனைவரும் மாதிரி தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘உனக்குள் தேடு’ என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படும். MTS தேர்விற்கான பயிற்சி இன்று (1ம் தேதி) முதல் தொடங்கப்படவுள்ளது.

Related Stories: