கும்பகோணத்தில் தொடர்செல்போன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

கும்பகோணம் : கும்பகோணத்தில் தொடர் செல்போன் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.கும்பகோணம் மாநகரில் கடந்த பல நாட்களாக மர்ம நபர்களால் செல்போன் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்தது.

இதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில், கும்பகோணம் டிஎஸ்பி மகேஷ்குமார் மேற்பார்வையில், கும்பகோணம் தனிப்படை எஸ்ஐ கீர்த்திவாசன் தலைமையில், எஸ்எஸ்ஐ கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், செந்தில், நாடிமுத்து, ஜனார்த்தனன், பார்த்திபநாதன் ஆகியோர் கும்பகோணம் பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கும்பகோணம் மகாமககுளம் அருகே அன்பழகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது மர்மநபர்கள் சிலர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.இது குறித்து அன்பழகன் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து பழைய மீன் மார்க்கெட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது கும்பகோணம் அருகே மணஞ்சேரி மெயின் ரோட்டில் வசிக்கும் கார்த்திகேயன் மகன் மூர்த்தி (23), சந்தனாள்புரம் புதுத்தெருவை சேர்ந்த ஏசுராஜ் மகன் பிரசாந்த் (22) மற்றும் பெருமாண்டி மேலத்தெருவை சேர்ந்த பூபதி மகன் மகேந்திரன் (22) ஆகியோரை புகார் அளித்த மூன்று மணி நேரத்தில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து இவர்களிடமிருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: