ஊட்டி : ஊட்டியில் இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி, பர்ன்ஹில் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணியளவில் தனக்கு ெசாந்தமான டிராக்டரில் ஊட்டி நகருக்கு வந்துள்ளார். பின்னர் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தனியார் பங்க்கில் டீசல் நிரப்பியுள்ளார். தொடர்ந்து கோத்தகிரி சாலையில் உள்ள ஒரு பேக்கரில் டீ குடித்துள்ளார்.
அப்போது ஒரு நபர், விவசாயியை அணுகி தனது பெயரை தெரிவித்து அறிமுகமாகி உள்ளார். பின்னர் கோத்தகிரி சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், காட்டேஜில் தனித்தனியாக 4 அறைகள் உள்ளன. காட்டேஜில் 20 வயது முதல் 25 வயதிற்குள் இரு இளம்பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வருவதாகவும், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 அறை வாடகை ரூ.800 முதல் ரூ.1000 வரையும் என மொத்தம் ரூ.2000 மட்டுமே செலவாகும். எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் ஒருமுறை வந்தால் மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
விவசாயி, அந்த நபரிடம் சரி போகலாம் என்று சொல்லி தனது டிராக்டரை சாலையின் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அந்த நபருடன் சம்பந்தப்பட்ட காட்டேஜிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு அறையில் இரண்டு பெண்கள் இருந்தனர். இந்த சூழலில் சட்டவிரோத செயல் என்பதை உணர்ந்த விவசாயி, கையில் பணம் குறைவாக இருக்கிறது ஏடிஎம்., சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியேறி உள்ளார். தொடர்ந்து ஊட்டி பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட காட்டேஜிற்கு சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் விவசாயி அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சையது அலி(43), தூத்துகுடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த அபுதாகீர் சித்திக்(47), ஊட்டியை சேர்ந்த ரகுபதி(36) ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இரு பெண்களும் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர்.