அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக 24 மணி நேரமும் இந்த பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்படும். மேலும் பஸ் கிடைக்காதவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பினரும் இரவு நேரத்தில் இந்த பேருந்து நிலையத்தில் தூங்குவது வழக்கம்.
இவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரவுடிகளும் ரகளை செய்து வந்தனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் மது குடித்துவிட்டு மதுபாட்டிகளை அங்கேயே போட்டு உடைப்பது, பயணிகளை மிரட்டி பணம் பறிப்பது போன்றவற்றால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். இப்பிரச்னைக்கு தீர்வாக, சி.எம்.டி.ஏ செயற் பொறியாளர் ராஜன்பாபு தலைமையில் ஒரு குழுவினர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.