தமிழ்நாடு மக்கள் பெருமைப்படும் அளவிற்கு முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்கிறார்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

பெரம்பூர்: தமிழ்நாடு மக்கள் பெருமைப்படும் அளவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் ஆட்சியை வழிநடத்தி வருகிறார், என்று பாலம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், 98வது வார்டு ஆஸ்பிரன் கார்டன் பகுதியில், ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2வது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் கார்டன் தெருவை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள குறுகலான கீழ்மட்ட பாலத்தை இடித்துவிட்டு, ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாலம் அமைக்கும் பணியை, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் அடிக்கல் நாட்டி நேற்று  தொடங்கி வைத்தனர்.

இந்த, பாலத்தின் மொத்த நீளம் 17.60 மீட்டர், பாலத்தின் அகலம் 11.50 மீட்டர் (இருபுறமும் நடைபாதையின் அகலம் 1.5 மீட்டர்) இதன் பணிகள் 24 மாதங்களில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், தயாநிதி மாறன் எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னை ஆஸ்பிரின் பாலம் குறுகிய பாலமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். நாங்கள், தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்ததை நிறைவேற்றும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், இப்பகுதி மக்களின் 10 ஆண்டுகாள கோரிக்கையை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு எடுத்த முயற்சியால், 2 வாரங்களில் நிறைவேற்றி, அதனை செயல்படுத்தியுள்ளார்.

மேலும், 2 ஆண்டுகளில் இப்பணி முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பி.கே.சேகர்பாபு இதனை  18 மாதங்களுக்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார். பழைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்ட வேண்டியிருப்பதால், சில காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட சிக்கல்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மழையின்போது அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின், தமிழ்நாட்டில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக செய்பட்டு முடிக்கப்பட்டதால், இந்த ஆண்டு பெய்த மழையின்போது, மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு எங்கும் மழைநீர் தேங்கவில்லை.

தமிழ்நாடு மக்கள் பெருமைபடும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்,’’ என்றார். தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு காலை சிற்றுண்டியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர்  மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, எம்எல்ஏ வெற்றி அழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: