பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்: வியாசர்பாடியில் பரபரப்பு

பெரம்பூர்: வியாசர்பாடியில் இரவு பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கிய வாலிபர் உயிரிழந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் கார்த்திக் (27). இவர் கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணியாற்றுகின்றார். திருமணம் ஆகவில்லை. நேற்றிரவு 10 மணி அளவில், வியாசர்பாடி பகுதியில் சாலையோரம் உள்ள கடையில் பரோட்டா வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கார்த்திக் உள்பட அனைவரும் சாப்பிட்டுள்ளனர். இதன்பிறகு இரவு 11 மணி அளவில், கார்த்திக்கு கடும் வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் மயக்கம் அடைந்துவிட்டார். இதன்பிறகு அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுசம்பந்தமாக எம்கேபி. நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குபதிவு செய்து பரோட்டா பாதிப்பு காரணமாகத்தான் உயிரிழந்தாரா, வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: