கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10வது நாளாக சிஎம்டிஏ அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணி

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக 24 மணி நேரமும் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. மேலும் பஸ் கிடைக்காதவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பினரும் இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் கும்பலாக தூங்குவார்கள். இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி மர்ம நபர்கள் வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரவுடிகளும் அட்டூழியம் செய்து வந்தனர். இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் மது குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து நாசப்படுத்தினர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆட்பட்டனர்.

இந்த நிலையில், பொதுமக்கள், பயணிகளின் கோரிக்கை ஏற்று சி.எம்.டி.ஏ செயற் பொறியாளர் ராஜன்பாபு தலைமையில் ஒரு குழுவினர் அமைத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கண்காணித்து வந்தனர். இவர்களுடன் கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட போலீசாரும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ரோந்து பணியில் ஈடுபட்டு இரவு நேரங்களில் கண்காணித்து வந்தனர். அப்போது தேவையில்லாமல் பேருந்து நிலையத்தில் தூங்கியவர்களை விரட்டி அடித்தனர். மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து ஆய்வாளர் குணசேகர் கூறுகையில், ‘’கோயம்பேடு  பேருந்து நிலையத்தில் தொடர்ந்து 10 நாட்களாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் வழிப்பறி, செல்போன், செயின் பறிப்பு, பிக்பாக்கெட், லேப்டாப் திருட்டு, ரவுடிகள் அட்டகாசம், கஞ்சா போதை கும்பல் நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் தொடர்ந்து ரோந்துவந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்’ என்றார். இதுபற்றி பயணிகள் கூறும்போது, ‘’கோயம்பேடு பேருந்து நிலையம் குற்றச் சம்பவங்களின் கூடாரமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தோம். ஆனால் சி.எம்.டி.ஏ அதிகாரிகள், போலீசாரின் ரோந்து பணியால் குற்றச் சம்பவங்கள் குறைந்து உள்ளது. இரவு நேரங்களில் பேருந்து நிலையம் சுத்தமாகவும் உள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக போலீசாருக்கும் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். ரோந்து பணி தொடரவேண்டும்’ என்றனர்.

Related Stories: