சிஎம்டிஏ திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், இக்குழுமத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களான சென்னை பகுதிகளில் ஏரிக்கரை மற்றும் நீர்முனை மேம்பாடு, சென்னை கடற்கரையோரம் மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்க திட்டம், மூன்றாம் முழுமைத் திட்டம், கட்டுமானப் பிரிவு திட்டங்கள், பிஎம்சி திட்டங்கள், கண்ணகி நகர், தீவு திடல், சிறுசேரி காடு மற்றும் செம்மஞ்சேரி திட்டம் குறித்த வருங்கால அறிவிப்புகள், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் புது பேருந்து நிலைய திட்டங்கள், இணையவழி திட்ட அனுமதி வழங்குதல், சென்னை வெளிவட்டச் சாலை வளர்ச்சித் திட்டம் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்து துறை அலுவலர்களுடன், அமைச்சர் சேகர்பாபு விரிவாக ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் எம்.லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர்கள் சாந்தி, பரிதா பானு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: