சென்னை: அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ம் அமைதி பேரணி நடைபெறும் என்று சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், த.இளைய அருணா, மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சி தந்த காவியத் தலைவர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தந்தவர், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்த, தென்னகத்தின் பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளினையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக முன்னணியினர் பிப்ரவரி 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.