சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது

சென்னை: அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் இறந்த விவகாரத்தில்,ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் பழைய ஆனந்த் திரையரங்கம் அருகே, சையது அலி பாத்திமா என்பவரின் சுற்றுச்சுவருடன் கூடிய பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி இரவு பகலாக நடந்து வந்தது. வீட்டின் 6 அடி உயர சுற்றுச்சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி நேற்று முன் தினம் காலை நடந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து சாலையோரம் நடைபாதையில் சென்ற பத்மபிரியா (23) மற்றும் வாலிபர் விக்னேஷ் குமார் (28), மற்றொரு பெண் மீது விழுந்தது.

அதற்குள் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆயிரம்விளக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலகட்ட போராட்டங்களுக்கு இடையே பத்மபிரியா, விக்னேஷ்குமார் உள்பட 3 பேரை மீட்டனர். ஆனால், பத்மபிரியா மட்டும் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். மேலும், பலத்த காயமடைந்த வாலிபர் விக்னேஷ்குமார், மற்றொரு பெண் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆயிரம்விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டின் உரிமையாளர் சையது அலி பாத்திமா, கட்டிடபொறியாளர் ஷேக் பாய், ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமான் மற்றும் பொக்லைன் இயந்திர உரிமையாளர் ஞானசேகரன் (35), பொக்லைன் ஓட்டுனர் பாலாஜி (25), ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில்,ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை காண்ட்ராக்டர் ஜாகீர் உசேன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாக்ஸ்: கட்டடத்தை இடிக்கும் பணியை நிறுத்த மாநகராட்சி உத்தரவுஇச்சம்பவம் தொடர்பாக பணிகளை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கட்டிடத்தை இடிக்கும்  பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை பணியை தொடங்க கூடாது என நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

Related Stories: