கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து நேற்று மாலை பொற்படாக்குறிச்சி கிராம வழியாக வானவரெட்டி, புக்கிரவாரி நோக்கி 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த பேருந்தை மரியஅந்தோணி(37) என்பவர் ஓட்டிசென்றார். பொற்படாக்குறிச்சி கிராம ஏரிக்கரை மீது அமைக்கப்பட்டுள்ள வழக்கமான சாலையின் வழியாக பேருந்து சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை மீறி பேருந்து ஏரியில் கவிழ்ந்தது.
இதனையடுத்து அந்த பேருந்தில் சிக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் 22 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.