பெரம்பூர்: புளியந்தோப்பு ஜேஜே நகர் 7வது தெருவை சேர்ந்தவர் பரத் (எ) பரத்குமார் (32). இவர், மீது புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ம்தேதி புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து, இனி எந்த குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்.
அதன்பிறகு கடந்த 16ம்தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் குற்ற செயலில் ஈடுபட்டு புளியந்தோப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் பரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை விசாரித்த துணை கமிஷனர் நேற்று தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் பரத்குமாரை 152 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.