லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பாஜக முன்னாள் அமைச்சர் மற்றும் இன்னாள் அமைச்சர்களிடையே சண்டை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடந்த குடியரசு தின கொண்டாட்டத்தின் போது, மாநில இணை அமைச்சர் டேனிஷ் அன்சாரி, மாநில முதல்வர் யோகியுடன் விழா மேடைக்கு வந்தார். மேடையின் மறுபுறத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் மோசின் ராசா வந்தார். அப்போது டேனிஷ் அன்சாரியும், மோசின் ராசாவும் ஒரே இருக்கையை நோக்கி சென்றனர். அதனால் யார் இருக்கையில் அமர்வது என்ற பிரச்னை ஏற்பட்டது.
அப்போது முன்னாள் அமைச்சர் மோசின் ராசா, தற்போதைய அமைச்சர் டேனிஷ் அன்சாரியை மற்றொரு இருக்கையில் அமருமாறு சைகை காட்டினார். அதனால் டேனிஷ் அன்சாரி அதிர்ச்சியடைந்தர். மேடை நாகரிகம் கருதி, அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் டேனிஷ் அன்சாரி அமர்ந்து கொண்டார். மேடையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் மோசின் ராசா ஆணவத்துடன் நடந்து கொண்டதாகவும், அமைச்சர் ேடனிஷ் ராசாவை அவரது இருக்கையில் அமர அனுமதித்திருக்க வேண்டும் என்றும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.