சென்னை: தி.நகர் வடக்கு போக் சாலையில் உள்ள தனியார் கிளப் ஒன்றில், பணம் ைவத்து சூதாட்டம் நடப்பதாக பாண்டி பஜார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அந்த கிளப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாலிசெட்டி நாகேஸ்வராவ் (68), சேலம் மாவட்டம் பேர்லென்ஸ் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (42), தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணா (52) உட்பட 35 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5,30,150 மற்றும் 780 சீட்டு கட்டுகள், 354 டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.