ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா துவங்கியது: வரும் 3ம் தேதி தேரோட்டம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத் தேர் திருவிழாவிற்கு கடந்த 24ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து தைத்தேர் கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையடுத்து 2ம் நாளான நாளை(27ம் தேதி) நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனம், மாலையில் ஹம்ச வாகனம், 3ம் நாளில் சிம்ம வாகனம், மாலையில் யாளி வாகனம், 4ம் நாளில் இரட்டைபிரபை வாகனம், மாலையில் கருட வாகனம், 5ம் நாளில் சேஷ வாகனம், மாலையில் ஹனுமந்த வாகனம், 6ம் நாளில் கற்பக விருட்சம் வாகனம், மாலையில் யானை வாகனம், 7ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8ம் நாள் நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளுகிறார்.

முக்கிய நிகழ்ச்சியான தை திருவிழா தேரோட்டம் பிப்ரவரி 3ம் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து நிறைவு நாளான வருகிற 5ம் தேதி நம்பெருமாள், ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள் திருவீதி வலம் வருகிறார்.

Related Stories: