வங்கி கடன் மோசடி வழக்கில் தொழிலபதிரை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்

அண்ணாநகர்: வங்கி கடன் மோசடி வழக்கில், தலைமறைவான தொழிலபதிரை பிடிக்க 3 தனிப்படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குப்தா (40), தொழிலதிபர். இவரது மனைவி வினிதா குப்தா (38). அண்ணாநகர் ரவுண்டானா அருகே, சஞ்சய் குப்தா வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்திவந்தார். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக, இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு தங்களது வீட்டை அடமானம் வைத்து வினிதாகுப்தா பெயரில் ரூ.53 லட்சம் கடன் வாங்கினார். ஆனால், கடன் தொகைக்கான தவணையை அவர் முறையாக செலுத்தவில்லை.

இந்நிலையில், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ஒரு கோடிக்கு மேல் ஆகிவிட்டது. இதையடுத்து, வங்கி நிர்வாகம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் எழும்பூர் நீதிமன்றத்தில், அந்த வீட்டை ஜப்தி செய்வதற்கான உத்தரவை பெற்று, ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டது. கடந்த மாதம் வங்கி அதிகாரிகள் அவ்வீட்டுக்கு சீல் வைத்தனர்.  இந்நிலையில், சஞ்சய் குப்தா தனது மனைவியுடன் தலைமறைவானார். புகாரின்பேரில்,  அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான 2 பேரையும், செல்போன் சிக்னல் மூலம் தேடி வந்தனர்.

அப்போது அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்ய,  அண்ணாநகர் துணை ஆணையர் ரோகித் தலைமையில், உதவி ஆணையர் ரவிச்சந்திரன், திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், அரும்பாக்கம் உதவி ஆணையர் அருள்சந்தோஷ் ஆகியோரின் தலைமையில் 3 தனிப்படையினர் நேற்று ஜார்கண்ட் மாநிலத்துக்குவிரைந்து சென்றனர்.

Related Stories: