சூலூர் அருகே நள்ளிரவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் பலி-7 பேர் காயம்

சூலூர் : சூலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த விபத்தில் 80 வயது மூதாட்டி உள்பட 2 பெண்கள் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.கோவை மாவட்டம், ஆர்எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவை நோக்கி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் கோவையில் இருந்து தாராபுரத்தை சேர்ந்த டாக்டர் மோகன் என்பவர் தனது தாய், தந்தையுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.இவர்களது கார்கள் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் கோவை சூலூர் விமானப்படை தளம் அருகே வந்தது.

திடீரென ஜெயராமன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரை தாண்டி வந்து டாக்டர் மோகன் ஓட்டி வந்த காரின் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 கார்களிலும் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சத்தமிட்டனர். இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே டாக்டர் மோகனின் தாயார் பிரிசில்லா (80) பரிதாபமாக இறந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயராமனின் மனைவி அமுத ஜான அரசி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: