தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய மோடி பாசறை நிர்வாகி கைது

கோபி: கோபி அருகே குடும்ப தகராறில் மனைவி மற்றும் உறவினர்களை பழி வாங்க தன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய மோடி பாசறை நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் மாணுவக்காடு போயர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (43). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும், விக்னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஸ் (10) என்ற மகன்களும் உள்ளனர். சண்முகம் தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறையின் கோபி சட்டமன்ற தொகுதி நிர்வாகியாக உள்ளார். 2 நாட்களுக்கு முன் சண்முகத்திற்கும் மனைவி அய்யம்மாளுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கோபியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு 2 மகன்களுடன் அய்யம்மாள் சென்றார். . நேற்று அதிகாலை தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக  சண்முகம் கோபி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மனைவி மற்றும் அவரது உறவினர்களை வழக்கில் சிக்க வைக்கலாம் என நினைத்து சண்முகமே தன் வீட்டில் பெட்ரோல்  குண்டு வீசி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: