சினிமாவில் நேரத்தை வீணாக்காதீங்க: ரசிகர்களுக்கு ஆர்ஜே. பாலாஜி அட்வைஸ்

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ரன் பேபி ரன். இதனை மலையாள இயக்குனர் ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். படத்தின் அறிமுக விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது: வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன் நான் நடித்த 3 படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள். இப்போதுதான் வெளிபடத்தில் நடிக்கிறேன். ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் கவனம் செலுத்த  மாட்டேன். வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம்தான் படத்தின் கதை. இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும்.

இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் சினிமாவிற்கு நேரத்தையும், உழைப்பையும் செலவிடுவதை தவிர்த்து வேறு வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மக்களை இரண்டாக பிரித்து கொம்பு சீவும் வேலைகளை நிறுத்த வேண்டும். சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா.

அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். இந்த படம் தற்போது தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பே பிரேக்ஈவன் வருமானத்தை கொடுத்துள்ளது. எனது சம்பளத்தை பற்றி கேட்கிறார்கள். நான் வெற்றிகளை வைத்தோ, மார்க்கெட்டை வைத்தோ சம்பளத்தை தீர்மானிப்பதில்லை. தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கிற அளவிற்கு எனது சம்பளத்தை தீர்மானிக்கிறேன். எனக்கு பணியாற்றும் மேக்அப் மேன், டிசைனர் உள்ளிட்டவர்களுக்கு நானே சம்பளம் கொடுக்கிறேன். தயாரிப்பாளரை கொடுக்க சொல்வதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: