டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து வெளியிட்ட பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், டுவிட்டர் லிங்க்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், டுவிட்டர், லிங்க்குகளை ஒன்றிய அரசு முடக்கியது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. `இந்தச் சம்பவங்களின்போது கலவரத்தைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’ என அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதற்கிடையே, இது தொடர்பாக மோடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது.