தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஜன.21 வரை வறண்ட வானிலையே நிலவும். : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஜனவரி 22, 23ல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஜனவரி 21 வரை வறண்ட வானிலையே நிலவும். நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. ஜனவரி 22 மற்றும் 23ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 - 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Related Stories: