தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிஆணையர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக சொத்து வரி விதிக்கப்படாமல் உள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள், தங்கள் பகுதிகளுக்கான மண்டல அலுவலகங்களில் இயங்கிவரும் வரி வசூல் மையங்களில் சொத்துவரி விதிப்பதற்கான விண்ணப்ப படிவத்தினை பத்து ரூபாய் செலுத்தி பெறலாம். பின்னர், உரிய ஆவணங்களுடன் இணைத்து மேற்கண்ட மையம், தபால் மூலமாகவோ அல்லது இணையவழி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இம்மனுக்கள் பெறப்பட்ட நாள் முதல் 15 நாட்களுக்குள் புதிய சொத்து வரி விதிக்கப்படும்.
மேலும் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தால் மனுக்கள் பெறப்பட்ட நாள் முதல் 15 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்யப்படும். இதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டால் மாநகராட்சி வருவாய் அலுவலரின் செல்போன் எண் 96772 57155 க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புதிய சொத்து வரி, காலிமனை வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமக் கட்டணம் போன்ற இனங்களுக்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள இ-சேவை மைய பணியாளர்கள் மற்றும் தனியார் கணினி மைய பணியாளர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் மூலம் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ேலும், பொதுமக்கள் பயனடையும் வகையில் TNUrbanESevai என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வரி, சான்றிதழ் போன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும், மேற்கண்ட செயலியைப் பயன்படுத்தி பயனடையலாம்.