புதுடெல்லி: தலைமறைவு குற்றவாளிகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யாத 7 மாநில உள்துறை செயலாளர்கள் பிப்ரவரி 13ம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் போது ஜாமீனில் சென்ற குற்றவாளி ஒருவர் தலைமறைவானார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலங்களும் , மாவட்ட வாரியான வழக்கு விசாரணையின் போது தலை மறைவானவர்கள், தேடப்படும் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஜாமீன் மற்றும் பரோலில் வெளியே சென்று தலைமறைவான குற்றவாளிகளின் விவரங்களை சேமிக்கும் வகையில் ஒரு தேசிய அளவில் இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.