சென்னை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான 509 கோயில்களும் புனரமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சேலம் மேற்கு இரா.அருள் (பாமக), கோபிசெட்டிபாளையம் கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக), அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் (திமுக), காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன் (விசிக), பென்னாகரன் ஜி.கே.மணி (பாமக), ஒரத்தநாடு வைத்திலிங்கம் (அதிமுக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பதில் வருமாறு: சூரமங்கலம் மாரியம்மனே கோயிலுக்கு உபயதாரர்கள் நிதியைக்கொண்டு ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதில் உபரியாக உள்ள ரூ.7 லட்சத்தை அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு ஒதுக்க ஒப்புதல் பெற மாநில குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உபயதாரர் நிதி இல்லாவிட்டாலும் ஆணையரின் பொது நிதியைக்கொண்டு திருப்பணியும், கும்பாபிஷேகமும் ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும்.