ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு ராகுலைவிட சூர்யகுமாரை சேர்ப்பதுதான் சரி: வாசிம் ஜாபர் பேட்டி

மும்பை:இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் கடுமையாக போராடி 1-1 என சமநிலை வகித்தன. தொடர்ந்து ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில், சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் விளாசவே இந்தியா 228 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இந்தியா மெகா வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று மதியம் 1.30 மணிக்கு துவங்கிவுள்ளது.

இந்நிலையில் தற்போது முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘‘இந்த ஒரு நாள் தொடரை பொறுத்தமட்டில் என்னைக் கேட்டால் சூர்யகுமார் யாதவிற்காக கே.எல்.ராகுலை நீக்குவதுதான் சரியான முடிவாக இருக்கும். டி20-யில் சூர்யகுமார் இருக்கும் பார்முக்கு, அவரால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரன் மழை பொழிய முடியும். சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள்தான் சிறப்பாக செயல்படவில்லை. பவுலர்கள்தான் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். மீண்டும் அதேபோல் பின்னடைவு ஏற்படக் கூடாது என்றால், சூர்யகுமாரை சேர்த்தே ஆக வேண்டும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்திய அணியின் பலமாக இருந்தது ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி ஆகியோர்தான்.

தற்போது மூன்று பேருமே ஒருநாள் கிரிக்கெட்டில் அவ்வளவாக சிறப்பாக செயல்படுவதுபோல் தெரியவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை டாப் ஆர்டர்தான் மிகமிக முக்கியம். 300 ரன்களை அடிக்க வேண்டும் என்றால், முதல் 30 ஓவர்களில் அடிக்கும் ரன்கள்தான் மிக முக்கியம். அப்படி முதல் 30 ஓவர்களில் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை என்றால், அதன்பிறகு சூர்யகுமார் யாதவ் போன்றவர்களால்தான் 300 ரன்கள்வரை இந்திய அணியை கொண்டு வர முடியும். கே.எல்.ராகுல் போன்றவர்களால் முடியாது. அதனால், ராகுலுக்கு பதில் அவரை சேர்த்தால், மிகச்சரியாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

Related Stories: