அண்ணாநகர்: டாஸ்மாக் கடையில் வாலிபரை அடித்துஉதைத்த வழக்கில் 3 பேரை கைது செய்தனர். சென்னை முகப்பேர் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன்(42. இவர் கார்பெண்டர். இவரது நண்பர் ராஜீவ்(40). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டு இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ரகு(எ) ரகுநாத்(30), காமேஷ்(22), தமிழ்வாணன்(26), தணிகவேல் ஆகிய 4 பேரும் அங்கு மது அருந்தியுள்ளனர்.
அப்போது ரகுவுக்கும் தீனதயாளனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது ரகுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரகு மற்றும் அவரது நபர்கள் சேர்ந்து தீனதயாளனை சரமாரியாக தாக்கியதுடன் பீர்பாட்டில், கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இவர்களின் தகராறை விலக்கிவிட்ட ராஜீவையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுசம்பந்தமாக ராஜீவ் கொடுத்த புகாரின் அடிப்படையில், நொளம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் மில்லர் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து, டாஸ்மாக் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீனதயாளனை தாக்கியதாக ரகு, காமேஷ், தமிழ்வாணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள தணிகைவேலை போலீசார் தேடி வருகின்றனர்.