தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு: பேரவையில் உரையாற்ற அழைப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு நேற்று நேரில் சந்தித்து சட்டப்பேரவையில் உரையாற்ற வரும்படி அழைப்பு விடுத்தார். தமிழக சட்டப்பேரவையின் 2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டம், ஜனவரி 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று நேற்று முன்தினம் சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆண்டின் முதல் பேரவை கூட்டம் என்பதால், தமிழக கவர்னர் உரையாற்றுவது மரபு. அதன்படி அன்றைய தினம் கூட்டம் தொடங்கியதும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு நேற்று காலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார். கவர்னர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு சந்தித்தபோது, ஜனவரி 9ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற வர வேண்டும் என்று முறைப்படி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, பேரவையில் உரையாற்ற வருவதற்கு தமிழக கவர்னர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Related Stories: