தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் மூதாட்டி தலை தடுப்பு கம்பியில் சிக்கியது-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை அருகே உள்ள தடுப்பு கம்பிகளின் இடையே மூதாட்டி ஒருவர் தலை மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடினார். அவரை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பயணியர் இருக்கை உள்ள இடத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் நிலையத்திலேயே யாசகம் பெற்ற அங்கேயே வசித்து வரும் வயதான மூதாட்டி ஒருவர் நேற்று கம்பிகளின் இடையே தலை மாட்டிய நிலையில் உயிருக்குப் போராடினார்.

இதுகுறித்து உடனடியாக மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு கம்பிகளை வெட்டி எடுத்து மூதாட்டியை பாதுகாப்பாக மீட்டனர். பின்பு சிகிச்சைக்காக அந்த மூதாட்டியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: