இந்திய எல்லையில் அத்து மீறல்; சீனாவை விமர்சித்த அமெரிக்க எம்பி

வாஷிங்டன்:  இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலை அமெரிக்க எம்பியான கிருஷ்ணமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் உள்ள இந்திய- சீன எல்லைப்பகுதியில்  சீன வீரர்கள் துப்பாக்கிகள் அல்லாத பிற ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தனர். இதனால் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். டிச.9ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. இதில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்திய தரப்பில் காயம் அடைந்த 6 பேர் கவுகாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான சீனாவின் சமீபத்திய அத்துமீறலை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க காங்கிரஸ் எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆயுதப் படைகள் மூலம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததன் மூலம் சமீபத்திய ஆக்கிரமிப்பு சம்பவத்தை அறிந்து நான் கலக்கமடைந்துள்ளேன். சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்தியப் படைகளுக்கு எந்தப் பெரிய உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் சீன  கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ந்து வரும் போர்வெறியை பார்க்கும் போது இந்தியா உள்ளிட்ட நமது நட்பு நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை இது நினைவூட்டுகிறது’என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: