கிருஷ்ணகிரி அருகே பைனான்சியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வாஞ்சி என்கிற சதீஷ்(40). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட துணை தலைவராக உள்ளார். நேற்றிரவு வீட்டில் சதீஷின் மனைவி ராதா, மாமியார் லட்சுமி, மகள் கவி ஆகியோர் இருந்தனர்.

அப்போது இரவு 10மணியளவில் 7பேர் கொண்ட கும்பல் சதீஷின் வீட்டிற்கு முன் வந்தனர். அவர்கள் திடீரென சத்தம்போட்டபடி சதீஷின் வீட்டை நோக்கி பெட்ரோல் குண்டு வீசினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த  சதீஷின் குடும்பத்தினர் உடனடியாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. கேட்டின் அருகே 10க்கும் மேற்பட்ட பெட்ரோல்பாட்டில்கள் சிதறி கிடந்தது.

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சதீஷ் மீது பலவழக்குகள் உள்ளது. போலீசார் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Related Stories: