ரூ.500 கோடி மோசடி வழக்கில் ‘ஹிஜாவ்’ குழும முக்கிய நிர்வாகி கைது

சென்னை: சென்னையை தலைமை இடமாக கொண்டு ‘ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் கீழ் எஸ்.ஜி. அக்ரோ புராடெக்ட், அருவி அக்ரோ புராடெக்ட்ஸ், சாய் லட்சுமி, ஆர்.எம்.கே.பிரதர்ஸ் 4 துணை நிறுவனங்கள் உள்ளது. ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் குழும இயக்குநர்களாக சவுந்தரராஜன், அலெக்சாண்டர் ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனம் சார்பில், ரூ.1 லட்சத்துக்கு மாதம் 15% வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். அதன் மூலம் தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் 4,500 பேர், சுமார் ரூ.500 கோடி வரை முதலீடு செய்தனர்.

ஆனால், உறுதியளித்தபடி 15% வட்டி வழங்காமலும், முதிர்வு அடைந்த பணத்தையும் தரவில்லை. இதையடுத்து, தலைமை அலுவலகம் மற்றும் கிளை நிறுவனங்களை மூடிவிட்டு இயக்குனர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். அதைதொடர்ந்து பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் படி, தலைமறைவாக இருந்து வந்த முக்கிய நிர்வாகியான சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி 5வது தெருவை சேர்ந்த மணிகண்டன்(51) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: