வலிப்பு நோயால் அவதிப்பட்ட மருமகள் கழுத்தை இறுக்கி கொலை செய்த மாமியார் கைது: உடந்தை கணவனும் சிக்கினான்

உளுந்தூர்பேட்டை: மாமனார் துக்க நிகழ்ச்சிக்கு வந்த இளம்பெண்ணை அவரது மாமியார் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்வராயன் மகன் ராமகிருஷ்ணன் (38). இவரது மனைவி செல்வி(30).  இவர்களுக்கு லோகிதாஸ் (10), கோகுல் (7) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மேலும், இவர்களது விவாகரத்து வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் ராமகிருஷ்ணன் மனைவி மீது கோபத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2ம் தேதி ராமகிருஷ்ணன் தந்தை கல்வராயன் இறந்து விட்டார். இந்த செய்தி அறிந்த செல்வி மாமனார் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அயன்குஞ்சரம் கிராமத்திற்கு சென்றார். பின்னர் அங்கேயே செல்வி தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாலை செல்வி திடீரென உயிரிழந்து விட்டதாக அவருடைய பெற்றோருக்கு ராமகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்று பார்த்த செல்வியின் தாய் நடையம்மாள் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

சந்தேகத்தின்பேரில் செல்வியின் கணவர் ராமகிருஷ்ணன், அவரது தாயார் நாககன்னி ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். செல்வியை கொலைசெய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதுபற்றி போலீசார் தரப்பில் கூறியதாவது:

ஏற்கனவே செல்வி மீது ராமகிருஷ்ணன் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனிடையே தனது தந்தை இறப்புக்கு செல்வி வருகிறார் என்பதை அறிந்த ராமகிருஷ்ணன் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து அவரது தாயார் நாககன்னியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். மாமனார் இறப்புக்கு வந்த செல்வி தனது தந்தை வீட்டுக்கு செல்ல முயன்றபோது, கணவர் மற்றும் மாமியார் உடனே செல்லாதே, காரியம் முடிந்த பின்னர் போகலாம் என்று கூறி அவரை அங்கேயே தங்க வைத்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வேலை தொடர்பாக ராமகிருஷ்ணன் வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டில் செல்வியும் அவரது மாமியார் நாககன்னி ஆகியோர் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் செல்விக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டுள்ளது. கீழே விழுந்து துடித்து கொண்டிருந்தபோது, நாககன்னி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செல்வியை சரமாரியாக தாக்கி, அவரது கழுத்தையும் இறுக்கியுள்ளார்.

இதில், சற்று நேரத்தில் செல்வி துடிதுடித்து இறந்தார். சிறிதுநேரத்தில் ராமகிருஷ்ணன் அங்கு வந்தபோது செல்வியை கொலை செய்ததை நாககன்னி தெரிவித்துள்ளார். இதையடுத்து வலிப்பு ஏற்பட்டு செல்வி கீழே விழுந்து இறந்துவிட்டதாக இருவரும் நாடகம் ஆடி உள்ளனர்.

அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். செல்வி உடலில் காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணையில் அவர்களின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து மருமகளை கொலை செய்த அம்மாவையும் அதற்கு உடந்தையாக இருந்த மகனையும் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: