தர்மபுரி: கடத்தூர் அருகே, பொதியம்பள்ளம் தடுப்பணைக்கு ஈச்சம்பாடி அணையில் இருந்து பம்பிங் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கு ரூ.401 கோடியில் திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே ஓபிளிநாயக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பை கிராமத்தில் பொதியம்பள்ளம் தடுப்பணை உள்ளது. செம்மணஅள்ளி அருகே உள்ள மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வத்தல் மலையின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் மழைநீர், கல்லாறாக உருவெடுத்து, இந்த அணைக்கு வருகிறது.
இந்த தடுப்பணையில் தேங்கும் தண்ணீர், கால்வாய்கள் மூலமாக பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது. இதன் மூலமாக கடத்தூர், மடதஅள்ளி, தாளநத்தம், வே.புதூர், போசிநாயக்கனஅள்ளி, லிங்கநாயக்கனஅள்ளி, தொங்கனூர், அஷ்டகிரியூர், வெள்ளியங்கிரி, புதுரெட்டியூர், கொடக்காரஅள்ளி, வீரகவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 16க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரும்போது, 25 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் இந்த பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. பொதியம்பள்ளம் தடுப்பணையில், கடந்த 2003ம் ஆண்டு விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சமீப காலமாக, இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கும் பகுதி மற்றும் கல்லாறு ஓடும் பகுதி ஆகியவற்றில் முட்செடிகள் வளர்ந்து, புதர்மண்டி காணப்படுகிறது. கால்வாயில் ஒரு பகுதி முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர்ந்து கல்லாற்றில் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் தேவையான அளவில் தண்ணீர் கிடைக்காமல் வறண்டன. இதே போல், தடுப்பணை மூலம் பாசன வசதி பெறும் ஏரிகளுக்கும் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:கல்லாற்றில் கட்டப்பட்டுள்ள பொதியம்பள்ளம் தடுப்பணையில், மழைநீர் தேங்கும் போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கிடைக்கும். இதனால் பல்வேறு கிராமங்களில் விவசாய பணிகளுக்கு தேவையான நீராதாரம் கிடைத்து வந்தது. இந்நிலையில், இந்த தடுப்பணையில் மழைநீர் தேங்கும் பகுதியிலும், இடதுபுற கால்வாயிலும் அதிகளவில் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து விட்டன. இதனால் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரித்தாலும், கால்வாய் மூலம் தண்ணீர் சீராக வெளியேற முடியவில்லை. எனவே, இந்த கால்வாயை ஆக்கிரமித்துள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை அகற்றி, கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அணையில் இருந்து கால்வாய்கள் மற்றும் கல்லாற்றில் தண்ணீர் சீராக செல்வதை உறுதி செய்ய, அதிகாரிகள் உரிய கண்காணிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பொதியம்பள்ளம் தடுப்பணையில் ஈச்சம்பாடி அணையில் இருந்து, மோட்டார் மூலம் பம்பிங் செய்து நீர் கொண்டு வருவதற்கு ரூ.401 கோடி மதிப்பில் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கடத்தூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஒன்றியத்தில் உள்ள 60 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு ஈச்சம்பாடி அணை பம்பிங் திட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் பொதியம்பள்ளம் தடுப்பணைக்கு நீர் கொண்டு வருவதற்கும், கால்வாய்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.