சென்னை: கனமழை பெய்தால் தமிழகம் முழுவதும் அதிகளவு மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவம் பட்டமேற்படிப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மேற்படிப்புக்கான வகுப்பை தொடங்கி வைத்தார். பின்னர் விஷ முறிவு கையேட்டை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல் முறையாக அவசர மருத்துவ சிகிச்சைக்கான துறை தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்பு எம்.டி அவசர சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவ கல்வி எனும் புதிய பாட பிரிவு தொடங்கப்பட்டு 85 இடங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில ஒதுக்கீட்டில் 50 % இடங்கள் நிரப்பப்பட்பட்டு வருகிறது. இதற்காக, உலக வங்கி நிதி உதவியுடன் 100 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இந்த பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதன்முறையாக துவங்கப்பட்ட இந்த நிகழ்வு நிதி ஆயோக் அமைப்பால் பாராட்டப்பட்டுள்ளது.