‘உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவேன்’ என்று மிரட்டல்; இளம்பெண்ணை கொன்று டிரம்மில் அடைப்பு: ஒரு வருடத்துக்கு பின் சடலம் மீட்பு

திருமலை: ‘உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவேன்’ என்று மிரட்டியதால் இளம்பெண்ணை கொலை செய்து தண்ணீர் டிரம்மில் அடைத்துவைத்து தப்பிய வாலிபர் சிக்கினார். இந்த சம்பவம் நடந்த ஒரு வருடத்துக்கு பிறகு சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் வருமாறு; ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் கொம்மாடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது வீட்டை கடந்த 2020ம் ஆண்டு காகுளம் மாவட்டம் பாலகொண்டாவை சேர்ந்த ரிஷி (35) என்பவருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு வேறு ஒரு கிராமத்தில் இருந்தார். இந்த வீட்டில் ரிஷி தனது மனைவியுடன் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் ஷாப்பில் வேலை செய்துவந்தார்.

கடந்த ஜூலை 2021ம் ஆண்டு ரிஷி, ரமேசுக்கு போன் செய்து, ‘’பிரசவத்திற்காக தனது மனைவியை அழைத்து செல்கிறேன். சிறிது நாளில் வீடு திரும்பி விடுவேன்’’ என கூறியுள்ளார். ஆனால் ஓராண்டாகியும் ரிஷி வீடு திரும்பவில்லை. வாடகை பணமும் தரவில்லையாம். இதுபற்றி ரமேஷ் கேட்டபோது நான் தற்போது எனது ஊரான பாலகொண்டாவில்தான் உள்ளேன். எனக்கு வேலை சரியாக இல்லை. வேலை கிடைத்தவுடன் வாடகை பணத்தை தந்துவிடுகிறேன் என கூறியுள்ளார். இவ்வாறு ஓராண்டாக தெரிவித்துவந்துள்ளார். ஆனால் வீட்டின் மின்கட்டணம் மட்டும் அதிகளவு வந்தபடி இருந்துள்ளது. பூட்டிய வீட்டில் எப்படி அதிகளவு மின் கட்டணம் வரும் என்ற சந்தேகம் ரமேசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சில மாதங்களுக்கு முன் வந்து வீட்டை பார்த்துள்ளார். வீடு பூட்டப்பட்டிருந்ததால் அவர் திரும்பி சென்றுவிட்டார். ஆனால் தொடர்ந்து வாடகை பணம் தராததால் ரமேஷ் வீட்டை வேறு யாருக்காவது வாடகைக்கு விடலாம் எனக்கருதி நேற்றுமுன்தினம் வீட்டை தூய்மை செய்ய வந்தார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. துர்நாற்றம் வந்த தண்ணீர் டிரம்மை பார்த்தபோது அதில் எலும்புக்கூடாக பெண் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மதுரவாடா போலீசார் சம்பவ இடம் வந்து பார்த்தபோது பெண் சடலமாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையை தொடர்ந்து காகுளத்தில் இருந்த ரிஷியை நேற்று பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும்  தகவல்கள் கிடைத்துள்ளது.

இதுபற்றி விவரம் வருமாறு; ரிஷி தனது மனைவியை பிரசவத்திற்காக காகுளத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் விசாகப்பட்டினம் திரும்ப காகுளத்தில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது 25 வயதுள்ள இளம்பெண்ணும் அங்கு வந்துள்ளார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டனர். இதன்பின்னர் ரிஷி விசாகப்பட்டினம் வந்து அங்குள்ள பள்ளியில் வேலை பார்த்துள்ளார். இதற்கிடையில் செல்போன் எண் வாங்கிய பெண் 2 நாட்கள் கடந்த நிலையில், உங்களை சந்திக்க வேண்டும். வரலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு ரிஷி சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண் மறுநாள் மாலை விசாகப்பட்டினம் வந்தபோது வாடகை வீட்டில் அன்றிரவு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மறுநாள் காலை அந்த பெண் தனது செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ரிஷி, ‘‘ தன்னிடம் பணம் இல்லை. பள்ளியில் வேலைக்கு சேர்ந்து சில நாட்கள்தான் ஆகிறது’’ என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், ‘‘நாம் இரவு உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன். நீ பணம் தராவிட்டால் உனது மனைவி உள்பட அனைவருக்கும் காண்பிப்பேன்’’ என்று மிரட்டியுள்ளார்.

இதன்காரணமாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த ரிஷி, அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் அவர் அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தில் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை வீட்டில் உள்ள தண்ணீர் டிரம்மில் வைத்து மூடிவிட்டு தப்பியுள்ளார். அத்துடன் துர்நாற்றம் வராமல் இருக்க பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பொருட்களை டிரம்மில் போட்டு அடைத்துள்ளார். பின்னர் பேன், லைட் எதையும் அணைக்காமல்  பின்பக்க கதவின் வழியாக வெளியே வந்து முன்பக்கம் உள்ள கதவை பூட்டிக்கொண்டு சென்றுள்ளார்.  இவ்வாறு தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரிஷியை கைது செய்தனர். அவரிடம் கொலையான பெண் குறித்து விசாரித்தபோது, ‘’அவருக்கு பெற்றோர் இல்லை. உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்’ என்று தெரியவந்துள்ளது. இறந்த பெண்ணின் பெயர் விவரங்கள், அவரது உறவினர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: