பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கட்டுமான பணி மார்ச்சில் முடியும்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை:  ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணியை மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணியில் 333 தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்புதல் அடங்கிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து 99 அணுகு பால கண்கள் பணிகளும் முடிவடைந்துள்ளன. அதில் 76 கர்டர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. செங்குத்து லிப்ட் இடைவெளி கர்டரின் கட்டுமானம் முடியும் நிலையில் உள்ளது. இந்த அதிநவீன பாலம் நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலமாக இருக்கும்.

இது 2023 மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.535 கோடி செலவில் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் மூலம் கடல் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தில் அதிக வேகத்தில் ரயில்களை இயக்கலாம். இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான போக்குவரத்தை அதிகரிக்கும். ராமேஸ்வரத்தை இந்தியாவின் நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 105 ஆண்டுகள் பழமையானது. மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவுடன் மண்டபத்தை இணைக்க 1914ம் ஆண்டு அசல் பாலம் கட்டப்பட்டது. 1988ல் கடல் ரயில் பாலத்துக்கு இணையாக ஒரு புதிய சாலைப் பாலம் கட்டப்படும் வரை இரண்டு இடங்களையும் இணைக்கும் ஒரே இணைப்பாக இது இருந்தது. இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: