விபத்தால் பாதித்தோர் இழப்பீடு கோர வசதியாக விபத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வழக்கு: டிஜிபி பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்ய ஏதுவாக விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சலிமா பானு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சாலை விபத்தில் எனது மகன்கள் இறந்தனர். எனவே, விபத்து தொடர்பான இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தபோது, விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் தாக்கல் செய்யக் கூறி மனுவை தீர்ப்பாயம் திருப்பி அளித்து விட்டது.

 குறிப்பிட்ட அந்த ஆவணங்களை வழங்கக் கோரியபோது காவல் துறையினர் லஞ்சம் கேட்டனர். ஆவணங்களை பெற முடியாததால் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல பல விபத்து வழக்குகளில் காவல் துறையினர் நடந்து கொள்வதால், அப்பாவி பொதுமக்கள் வழக்கு ஆவணங்களை பெறும் வகையில், விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை காவல் துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

Related Stories: