திருவண்ணாமலை : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-ம் நாள் விழா விநாயகர் தேரோட்டத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேரோட்டத்தில் அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். கடந்த நவம்பர் 27-ம் தேதி அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள 67 அடி உயர தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கியது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. 2-ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய விநாயகர் முருகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோயில் வளாகத்தை வளம் வந்தன. 16 கால் மண்டபம் அருகே தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையடுத்து காலை 7 மணியளவில் ராஜகோபுரத்தில் இருந்து தொடங்கிய விநாயகர் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்தனர்.
அண்ணாமலையாரை வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் கரும்பில் சேலையை கொண்டு தொட்டில் கட்டி அதில் தங்கள் குழந்தைகளை வைத்து மாட விதிகளை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விநாயகர் தேரையடுத்து, முருகர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். இரு தேர்களும் நிலையை வந்தடைந்ததும் அண்ணாமலையார் தேர் எனப்படும் பெரிய தேர் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் அணிவகுத்து வடம் பிடிப்பர். பெரிய தேர் நிலையை எட்டியதும் இரவில் நடைபெறும் அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுப்பார்கள். இதன் பின்னல் சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர் வடம் பிடிப்பார்கள். தேரோட்டத்தையொட்டி சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்கள் காட்டப்படும். அதன் தொடர்ச்சியாக மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மாகதீபம் ஏற்றப்படும்.