இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம் 17 வயது சிறுமி பலாத்காரம் போக்சோவில் காதலன் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 41 வயது பெண்,  கணவரை இழந்து, தனது 17 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மோனிஷ் (22) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு  காதலாக மாறியது. இதையடுத்து, அவர்கள் கடற்கரை, சினிமா என பல  இடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர். அப்போது, மோனிஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி,  சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிறுமி கூறியதால், செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோனிஷ் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் மோனிஷ் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்வதற்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அவர், சிறுமி என்பதை அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுபற்றி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, சிறுமிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மோனிஷை தேடி வந்தனர். அதில், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியில் மோனிஷ் பதுங்கி இருப்பது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் பிடித்து, போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: