சென்னை: சென்னையில் தனிநபர்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் குடிநீரின் தரம் அறிய ரூ.75 கட்டணம், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களுக்கு தரமான குடிநீர் வழங்குதல் மற்றும் பாதுகாப்பான முறையில் கழிவுநீரகற்றும் பணிகளை மேற்கொள்வதோடு, குடிநீரின் தரத்தினை பரிசோதிப்பதை ஒருங்கிணைந்த பணியாக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கிணறுகள், ஆழ்துளை நீர் போன்ற நீராதாரங்களை ஆய்வு செய்வதற்கு தர உறுதி பிரிவு இயங்கி வருகிறது. சென்னையில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில் தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீரின் தரத்தை நவீன முறையில் பரிசோதிக்க கீழ்ப்பாக்கத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய பரிசோதனை அமைக்கப்பட்டுள்ளது. இதனை, கடந்த மாதம் 22ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது, இந்த பரிசோதனை கூடம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.